ஞாயிறு, செப்டம்பர் 27, 2015

ஈர மணலில்...

           ஆழ்ந்த அமைதியான உறக்கத்தில் இருந்த அந்த சிப்பியை, சுழன்று வந்த அலையொன்று தூக்கிக் கொண்டு கரையில் விட்டுச் சென்றது. சில நொடிகளில் வந்த மற்றொரு அலை அதை மேலும் சிறிது தூரம் தள்ளிச் சென்றுவிட்டது. கருப்பையிலிருந்து வெளியே தள்ளப்பட்ட குழந்தை போல அனாதையாய் கிடந்தது சிப்பி.




          சற்று தூரத்தில் மணல்வெளில் மணல்வீடு கட்டி விளையாடி கொண்டிருந்தனர் சிறுவர் சிலர். சிப்பியைக் கண்ட சிறுமியொருத்தி அதையெடுத்து மணல்வீட்டின் உச்சியில் வைத்து மகுடமாக்கினாள்.

             இருள்போர்வையை வானம் மெல்ல இழுத்து போர்த்த மணல்வீட்டை தரைமட்டமாக்கிய சிறுவர் கூட்டம் தங்கள் வீடுகளை நோக்கி ஓடினர்.
கடற்கரை மணலில் தள்ளாடியபடியே நடந்து வந்தான் ஒருவன். சிப்பியின் கூர்மையான பகுதி அவன் காலில் குத்திவிட, வலியில் துடித்தவன் வழியில் கிடந்த சிப்பியை தூக்கி தூரம் எறிந்தான் எரிச்சலுடன். கடலிடமிருந்து இன்னும் தூரம் சென்றது சிப்பி.
                     
                 காலை விடியலின் வெளிச்சத்தில் கடற்கரை அருகில் இருந்த அணிகலன் கடையை திறந்தான் கடைக்காரன்.அப்போது வாசலிலே கண்டான் அந்த சிப்பியை. சிறிய சேதம் கூட இல்லாத சிப்பியை கையில் எடுத்த அவன், எந்த சிற்பியின் கையும்படாமல் எவ்வளவு அழகாக செதுக்கப்படுள்ளது இந்த சிப்பி என வியந்தான். 

                   தினமும் முத்துக்கள், சிப்பி, சங்குகளுடன் தான் தொழில் செய்து வரும் அவனுக்கு இந்த சிப்பி தனியாய் தெரிந்தது. தான் தற்போது சிறப்பாய் செய்து வரும் முத்து மாலையுடன் அந்த சிப்பியை இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைத்தான். பெட்டகத்தினுள் வைத்திருந்த முத்துமாலையை எடுத்து சிப்பியுடன் வைத்து பார்த்தான். தாயுடன் சேய் இருக்கும்போது தான் அழகின் உச்சம் என நினைத்து கொண்டான்.பின்ப் அதனை அந்த மாலையுடன் கோர்க்க சிப்பியின் மேல் பகுதியில் சிறு துளையிட்டான். கூர்மையான பகுதிகளை சீர் செய்தான். பட்டை தீட்டிய வைரமாய் தோன்றியது. பின்பு மீண்டும் அந்த பெட்டகத்திற்குள் வைத்து மூடினான்.

                    உச்சிற்கு சென்ற கதிரவனின் வெட்கை தாங்க முடியாமல், நிழலும் அனைவரின் காலுக்கடியில் ஒளிந்து கொண்டது.அந்த மதிய நேரத்தில், அந்த கதிரவனினும் பொலிவாய் பெண்ணொருத்தி தோழிகளுடன் நடந்து வந்தாள். கடைவீதியின் இருபுறமும் இருந்த கடைகளில் அழகுசாதனபொருட்களையும்,அணிகலன்களையும் பார்த்தபடியும், ஒரு சிலவற்றை வாங்கி கொண்டும் வந்தனர் தோழிகள். நித்திலா மட்டும் எதையுமே கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. நேரான அதே நேரத்தில் சோகமான பார்வையுடன் கூட்டத்திற்க்கு நடுவில் தனிமையாக வந்து கொண்டிருந்தாள். அழகுசாதன பொருட்களிலையே கண்ணாக இருந்த தோழிகள் நித்திலாவை கண்டுகொள்ளவில்லை.


                      'பாவம் அவர் மனம் எவ்வளவு நொந்துபோயிருக்கும். வாளினால் உடலில் பல காயங்கள் வாங்கியவர், என் ஒற்றை வார்த்தையால் அவர் மனம் எவ்வளவு காயம் பட்டிருக்கும். சுவையை அறிய தெரியும் நாவிற்கு ஏன் அடுத்தவர் மனதை புரிந்து கொண்டு பேச தெரியவில்லை.' என தனக்குள்ளேயே தன்னைப் பற்றி கடுமையாக கோபித்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தாள்.


                      எல்லா பெண்களும் அந்த கடையில் நின்று பார்ர்துகொண்டிருந்தனர். நித்திலாவும் அவர்கள் பின்னா சென்று நின்றாள். பெண்கள் கூட்டத்தை கண்டதும் கடைக்காரன் இத்தனை நாள் சிரமப்பட்டு செய்துவந்த முத்துமாலையை திறந்து காண்பித்தான். எல்லா பெண்களும் மொத்தமாய் முகம் சுளித்தனர் 'முத்து மாலையில் சிப்பியா?'


அனைவரையும் விலக்கி கொண்டு முன்னால் சென்ற நித்திலா 'மிக அருமையாக உள்ளது. இதை நான் வாங்கி கொள்கிறேன்'

பின்பு தன் தோழி முகில்வாகினியிடம் இதை என் கழுத்தில் அணிவித்து விடு' என்றாள்
சிறிது தயக்கத்துடன் அணிவித்துவிட்டாள் அவள்.

'இந்த மாலையில் அப்படி என்ன அழகு இருக்கிறது. ஒரு வேளை சிப்பி இல்லையென்றால் அழகாய் இருந்திருக்கலாம்' என்றாள் இளசெந்தினி.

'இந்த சிப்பி இடம் அளிக்கவிட்டால் முத்து பிறந்திருக்காது' என்றாள் சற்று குறுகிய புன்னகையுடன்.

வீடு திருப்பிய பின் மாலை நேரத்தில் அந்தி வானத்தை பார்த்தபடியே கிணற்றின் மேல் உட்கார்ந்திருந்தாள். அந்த சிப்பியை எடுத்து உதடுகளுக்கிடையே வைத்து கொண்டு முந்தைய நாள் மாலை பேசியதை எண்ணிக் கொண்டிருந்தாள்.

'போருக்கு செல்லும் நீங்கள் எதிரி நாட்டினரை நிலைகுலையச் செய்வீர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் போர் எவ்வளவு காலம் நடக்குமோ? அவ்வளவு நாட்கள் உங்களை பிரிந்து எப்படி உயிர் வாழ்வேன்? உங்கள் நாட்டை காக்க புறப்படும் நீங்கள் உங்கள் உலகை காக்க என்று திரும்பி வருவீரோ!'

'நித்திலா! என் வாள் சுழலும் வேகம் தீர்மானிக்கும் உன்னை மீண்டும் நான் காணும் காலத்தை. என் மனம் முழுவதும் உன் நினைவு தான் நிறைந்துள்ளது.'

'நீங்கள் என்னைவிட நாட்டை தான் அதிகம் நேசிக்கிறீர்கள் போலும். பின்னர் எப்படி உங்கள் மனது முழுவதும் நான் இருப்பேன். நாடு நிரம்பியபின் சிறு மிச்சத்தில் தான் நான் உள்ளேன்.'

'உன் வருங்கால துணைவனை அனைவரும் வீரமற்றவன் என கூற வேண்டுமா நித்திலா. உன்னை சில காலம் பிரிவதினால் நமக்கிடையே உள்ள அன்பு அணுவளவும் குறையாது என் அழகே.'

'என் அன்பு குறையாது ஆயுளுக்கும். உங்கள் அன்பு குறைந்துவிடுமோ என்ற பயம் தான்'

'என் அன்பு குறைந்து விடும் என்று பயமா? என் ஆயுள் குறைந்துவிடும் என்ற பயமா?'

'உங்கள் வீரத்தின் மேல் பயமில்லை.'

'அப்படியென்றால் என் அன்பின் மீது தான் பயமா?'

'இல்லை.பிரிவின்மீது தான் பயம்.'

'பிரிவு நிரந்தரம் இல்லை நித்திலா. நம்பிக்கையுடன் என்னை வழியனுப்பு. வாளை கீழே வைத்த பின் என் கை முதலில் உன் கையை தான் பிடிக்கும்.

'உங்களை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்கும் மன நிலையில் நான் இல்லை. நான் வருகிறேன்.'


                                                                                                                                   -(வருவேன்)

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...