ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2016

உதிர்வு

ஆனி காற்றில் சற்றே எதிர் நீச்சலடித்து பறந்து கொண்டிருந்தது அந்த பட்டாம்பூச்சி. அதன் பார்வையில் அன்று எந்த மலர்களும் விழவில்லை. இருந்தும் வெளிச்சம் குறைவதற்குள் ஒரு மலரையாவது அடைந்து மது அருந்தவேண்டும் என்ற வேட்கையில் அந்த தோட்டத்தின் செடிகளில் எல்லாம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது. சூரியன் மேற்கை ஒட்டி நடைபயணம் செய்து கொண்டிருந்தது.
'நித்திலா! செடிகுள்ள போகாத. பூச்சி எதாவது இருக்க போகுது' என சத்தம் கேட்டதும் சற்றே மேலெழும்பி பறந்தது.
செடிக்களுக்கிடையே தென்றலாய் துள்ளி குதித்து வந்தாள் மழலை நித்திலா.
சில செடிகளோடு கை குலுக்கினாள்.
சில செடிகளோடு சினேகம் பேசினாள். சில செடிகளை தடவி கொடுத்தாள்.
எல்லா செடிகளிலும் ஒரு மலரை கிரீடமாக அணிந்திருந்த செடி அவளை தனியாக ஈர்த்தது. மெல்ல அந்த செடியிடம் நகர்ந்தாள்.
மெளனமாக அதன் மணத்தை நுகர்ந்தாள்.
அவளுக்கு பயந்து வட்டமிட்டு கொண்டிருந்த பட்டாம்பூச்சியும் அவள் தயவால் ஒரு மலரை கண்டு கொண்டது. ஆனாலும் நெருக்க முடியாத நெருக்கடி நிலையில் வானில் வட்டமிட்டு கொண்டிருந்தாள் வண்ண மடல்காரி. இன்னும் இரண்டொரு மணித்துளிகள் தான் ஆயுள் அந்த மலர்க்கு.
இருந்தும் அதற்க்கும் பெரிய போரட்டம் நடத்த வேண்டியிருக்கும் போல.
ஒரு பிஞ்சு ஆயுதத்தால் கொலை செய்யப்படலாம். அல்லது பசியில் அலையும் அந்த ரெக்கைகாரிக்கு ஒரு வேளை உணவு கொடுக்கலாம். படபடப்பிலும், காற்றிலும் துடித்து கொண்டிருந்தன மலரின் இதழ்கள்.
அந்த மென்கைகள் காம்பை மெதுவாக பிடித்தது. பட்டாம்பூச்சி பட்டென்று அந்த மழலையின் பார்வையில் விழுந்து பக்கத்து செடியில் அமர்ந்தது. காம்பை பற்றிய கை, பட்டாம்பூச்சி பக்கம் திரும்பியது. மலருக்கு வந்தது காம்போடு போனது. இப்போது பட்டாம்பூச்சியின் ஆயுள்ரேகை பிஞ்சின் விரல்களில். அழுத்தம் வண்ணத்தை அழித்து கொண்டிருந்தது.
பட்டாம்பூச்சியை தூக்கிபிடித்து கொஞ்சி பேசி கொண்டிருந்தாள் அர்த்தம் இல்லா வார்த்தைகளால். கூட்டுப்புழுவாய் இருக்கும் தன் மகளை இனி பார்க்க முடியுமா? அவளுக்கு உயரே பறக்க யார் கற்று குடுப்பது?  செய்வதறியாது திகைத்தது சிக்கிய சில்க்'காரி.  ஒரு மரண வாக்குமூலம் அதன் இறக்கைகளில் எழுதப்பட்டு கொண்டிருந்தது.
இன்னும் மணந்து கொண்டிருந்த மலர், தன் ஆயுளில் மீதியை உதிர்க்க நினைத்தது. வீசிய சற்று பலத்த காற்றில் காம்பிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது. பூ தரையில் விழுந்ததை கண்ட நித்திலா பட்டாம்பூச்சியை விட்டு, பூவை எடுத்தாள். தப்பி பிழைத்த பட்டாம்பூச்சி மீண்டும் அதே வட்டத்திற்க்குள் வந்தது. ஆனால் அங்கிருந்து செல்ல மறுத்தது. பூவை கையில் எடுத்த நித்திலா அதன் இதழ்களை இன்னும் அதிகமாக விரித்தாள். அதன் மணம் அவள் விரல்களில் ஒட்டிக்கொண்டது.
'நித்திலா! வா கிளம்பலாம்' என்று அம்மாவின் சத்தம் கேட்டவுடன் அந்த பூவை கீழேவிட்டுச் சென்றாள்.
நிலவின் ஒளியில் அந்த பூவின் இதழில் ஒரு துளி நீர் மின்னியது. பட்டாம்பூச்சியின் கண்ணீர் அஞ்சலியாய்!

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...