ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2016

உதிர்வு

ஆனி காற்றில் சற்றே எதிர் நீச்சலடித்து பறந்து கொண்டிருந்தது அந்த பட்டாம்பூச்சி. அதன் பார்வையில் அன்று எந்த மலர்களும் விழவில்லை. இருந்தும் வெளிச்சம் குறைவதற்குள் ஒரு மலரையாவது அடைந்து மது அருந்தவேண்டும் என்ற வேட்கையில் அந்த தோட்டத்தின் செடிகளில் எல்லாம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது. சூரியன் மேற்கை ஒட்டி நடைபயணம் செய்து கொண்டிருந்தது.
'நித்திலா! செடிகுள்ள போகாத. பூச்சி எதாவது இருக்க போகுது' என சத்தம் கேட்டதும் சற்றே மேலெழும்பி பறந்தது.
செடிக்களுக்கிடையே தென்றலாய் துள்ளி குதித்து வந்தாள் மழலை நித்திலா.
சில செடிகளோடு கை குலுக்கினாள்.
சில செடிகளோடு சினேகம் பேசினாள். சில செடிகளை தடவி கொடுத்தாள்.
எல்லா செடிகளிலும் ஒரு மலரை கிரீடமாக அணிந்திருந்த செடி அவளை தனியாக ஈர்த்தது. மெல்ல அந்த செடியிடம் நகர்ந்தாள்.
மெளனமாக அதன் மணத்தை நுகர்ந்தாள்.
அவளுக்கு பயந்து வட்டமிட்டு கொண்டிருந்த பட்டாம்பூச்சியும் அவள் தயவால் ஒரு மலரை கண்டு கொண்டது. ஆனாலும் நெருக்க முடியாத நெருக்கடி நிலையில் வானில் வட்டமிட்டு கொண்டிருந்தாள் வண்ண மடல்காரி. இன்னும் இரண்டொரு மணித்துளிகள் தான் ஆயுள் அந்த மலர்க்கு.
இருந்தும் அதற்க்கும் பெரிய போரட்டம் நடத்த வேண்டியிருக்கும் போல.
ஒரு பிஞ்சு ஆயுதத்தால் கொலை செய்யப்படலாம். அல்லது பசியில் அலையும் அந்த ரெக்கைகாரிக்கு ஒரு வேளை உணவு கொடுக்கலாம். படபடப்பிலும், காற்றிலும் துடித்து கொண்டிருந்தன மலரின் இதழ்கள்.
அந்த மென்கைகள் காம்பை மெதுவாக பிடித்தது. பட்டாம்பூச்சி பட்டென்று அந்த மழலையின் பார்வையில் விழுந்து பக்கத்து செடியில் அமர்ந்தது. காம்பை பற்றிய கை, பட்டாம்பூச்சி பக்கம் திரும்பியது. மலருக்கு வந்தது காம்போடு போனது. இப்போது பட்டாம்பூச்சியின் ஆயுள்ரேகை பிஞ்சின் விரல்களில். அழுத்தம் வண்ணத்தை அழித்து கொண்டிருந்தது.
பட்டாம்பூச்சியை தூக்கிபிடித்து கொஞ்சி பேசி கொண்டிருந்தாள் அர்த்தம் இல்லா வார்த்தைகளால். கூட்டுப்புழுவாய் இருக்கும் தன் மகளை இனி பார்க்க முடியுமா? அவளுக்கு உயரே பறக்க யார் கற்று குடுப்பது?  செய்வதறியாது திகைத்தது சிக்கிய சில்க்'காரி.  ஒரு மரண வாக்குமூலம் அதன் இறக்கைகளில் எழுதப்பட்டு கொண்டிருந்தது.
இன்னும் மணந்து கொண்டிருந்த மலர், தன் ஆயுளில் மீதியை உதிர்க்க நினைத்தது. வீசிய சற்று பலத்த காற்றில் காம்பிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது. பூ தரையில் விழுந்ததை கண்ட நித்திலா பட்டாம்பூச்சியை விட்டு, பூவை எடுத்தாள். தப்பி பிழைத்த பட்டாம்பூச்சி மீண்டும் அதே வட்டத்திற்க்குள் வந்தது. ஆனால் அங்கிருந்து செல்ல மறுத்தது. பூவை கையில் எடுத்த நித்திலா அதன் இதழ்களை இன்னும் அதிகமாக விரித்தாள். அதன் மணம் அவள் விரல்களில் ஒட்டிக்கொண்டது.
'நித்திலா! வா கிளம்பலாம்' என்று அம்மாவின் சத்தம் கேட்டவுடன் அந்த பூவை கீழேவிட்டுச் சென்றாள்.
நிலவின் ஒளியில் அந்த பூவின் இதழில் ஒரு துளி நீர் மின்னியது. பட்டாம்பூச்சியின் கண்ணீர் அஞ்சலியாய்!

சனி, ஏப்ரல் 02, 2016

அந்த சின்ன தேவதை!



ஆயிரம் சிற்பங்கள்
சுமந்தும் கிடைக்காத அழகை
அசையும் சித்திரமாய்
நீ சுற்றி திரிகையில் பெற்றது
அந்த கோவில்!

கல்லில் உறங்கி கிடக்கும்
அந்த சாமியை எழுப்ப
இத்தனை மணிகள் வேணாமே.
உன் கால் கொலுசின் ஓசை போதுமே!

உன் பிஞ்சு விரல்கள் கோர்த்து
கும்பிடும் அழகில்
நாத்திகனான எனக்கும்
தெய்வ தரிசனம்!

உன் நெற்றியில் குங்குமம்
இரு புருவங்களுக்கிடையில்
உதித்த செங்கதிராய்
இன்னும் கொஞ்சம் பிரகாசம்!

கோவில் யானையை
பார்த்ததும் பயப்படும் உன் விழிகள்.
உன் உச்சிதனை முகர முடியா
வருத்ததில் அந்த யானை!

குளத்தின் படிக்கட்டில்
உன் ஈரபாதம் பதித்த தடயத்தில்
என் காலடி நனைத்து கொண்டேன்!

கோபுரங்களை அண்ணாந்து பார்த்துவிட்டு
கோவிலை மீண்டும் கட்டிடமாக்கி
புறப்பட்டுச் சென்றாள்
அந்த சின்ன தேவதை!

காதல்&தேர்தல்


பதின்ம வயதில் காதல்
உரிமையா? கடமையா?
தெரியவில்லை எனக்கு.

இருந்தும் மனுத்தாக்கல்
உன் பெயர் பட்டியலில்
என் பெயர் பின் இணைக்க.
எப்போது ஆரம்பிக்க போகிறாய்
மன'தாக்கல்.

ஓயாமல் பிரச்சாரம்
செய்யும் உன் நினைவுகள்.

அழகாய் இருக்கும்
அனைத்தும் உன் சின்னங்களாக
என் மனச்சுவரில் ஓவியமாக
பதிந்துகொண்டே போகிறது.

என் விரலோடு
உன் விரல் சேர்த்து
உன் காதல் வாக்கை
செலுத்திவிடு.

காதல் ராணியாய்
என் இதய கோட்டையில்
அமர்ந்துவிடு.

WAR & LOVE





போருக்கும், காதலுக்கும் சிறுதுளி தான் வித்தியாசம்.

தனக்காக பிறரை அழிப்பது - போர்
பிறருக்காக தன்னையே அழிப்பது - காதல்

வெளியே காட்டும் வீரம் - போர்
மறைத்து வைக்கும் வீரம் - காதல்

எதிரியை வெல்லும் தந்திரம் - போர்
தன்னையே தோற்கடிக்கும் மந்திரம் - காதல்

வரலாற்றுக்கரையில் போரைப் போலவே
காதலும் ஆழமாக கால் பதித்து சென்றுள்ளது.
சில இடங்களில் இரண்டும் ஒரே இடத்தில் ஆழம்
பார்த்து சென்றுள்ளது.

தடம்-1

அக்பர்- தாஜ்மஹால் தலைமுறையின் முன்னோடி.
அனார்கிளி என்ற அழகியின் மேல் அளவில்லா காதல்
அக்பரின் மகன் சலீம்க்கு. இதை விரும்பாத அக்பர் அவர்களின்
காதலுக்கு சிகப்பு கொடி காட்ட, வெள்ளை கொடி காட்டாமல்
துணிந்து போருக்கு தயாரானார் சலீம். பதவிக்காக அன்றி
தன் காதலுக்காக தன் அப்பாவிற்கு எதிராகவே போர் புரிந்தார்.
துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்தார். தோல்வியால்
விரக்தியடைந்த அனார்களி உயிருடன் கல்லறை புகுந்து
காதல் இறவாமல் உயிர் மட்டும் துறந்தார்.

தடம்-2

தன் எதிரி நாட்டு அரசனின் மகளான சயுக்தா மீது காதல் மூண்டது
பிரித்திவிராஜ் சவுக்கானுக்கு. சம்யுக்தாவின் சுயம்வரத்திற்கு அனைத்து
நாட்டு இளவரசர்களுக்கும் அழைப்பு விடுத்தார் அவளின் அப்பா.
பிரித்திவி மீது வெறுப்பு கொண்ட அவர், அவனுக்கும் மட்டும் அழைப்பு
அனுப்பவில்லை. மேலும் அவனை இழிவு படுத்தும் நோக்கில் அவன்
உருவசிலையை களிமண்ணில் செய்து அதனை வாயிற்காவலனாக
நிறுத்தி வைத்தார். சுயம்வரத்திற்கு வந்த அனைவரும் அதனை பார்த்து
சிரித்தபடி உள்ளே சென்றனர். தான் வென்றுவிட்டதாக உள்ளுக்குள் பூரித்துகொண்டார் சயுக்தா அப்பா.

சுயம்வரம் இனிதே ஆரம்பித்தது. மணமாலையுடன் வந்த சயுக்தா அனைத்து
நிஜ அரசர்களையும் தவிர்த்து சிலையான பிரித்திவிக்கு மாலை அணிவித்தாள். சிலைக்கு மாலையிட்ட சம்யுக்தாவின் கரங்களை பற்றிக் கொண்டு கவர்ந்து சென்றான். சினத்தில் தோல்வியில் முகம் வெளிறி நின்றார் பிரித்திவியின் மாமனார்.

தடம்-3

ராஜஸ்தானை ஒட்டிய தற்போது பாகிஸ்தானின் ஒரு சிறு பகுதியை
ஆட்சி செய்தவன் மகேந்திரா. ஒருநாள் வேட்டைக்கு செல்லும் போது
அவன் பார்த்து மயங்கிய தேவதை தான் மூமல். இருவருக்கும் இடையில்
இதயவேட்டையில் காதல் மலர்ந்தது.

இருப்பதிலேயே மிக வேகமாக பயணிக்கும் ஒட்டகத்தை தேர்வு செய்து
அதில் பயணித்து தினமும் இரவில் தன் காதலியை காண வருவார்.
மறுநாள் விடியும் அரண்மனை திரும்பிவிடுவார். ஒருநாள் இதை கண்டு
கொண்ட அவர் குடும்பத்தினர் அந்த ஒட்டகத்தின் கால்களை வெட்டினர்.
இதனால் மகேந்திரா அவளை சென்று காண முடியாது என்று நிம்மதி
அடைந்தனர்.

மனம் நொந்த அவர், தன் காதலியை காண வேண்டும் என்ற ஆர்வத்தை
தொலைக்கவில்லை.  வேறொரு ஒட்டகத்தை தயார் செய்தார். புதிய ஒட்டகம்
தவறுதலாக பாமீர் பக்கம் அழைத்து சென்றுவிட்டது. உச்சி இரவில் தான் வழி தவறியது அவருக்கு தெரிந்தது. வழியை திருத்தி காதலியின் ஊருக்கு
ஒட்டகத்தின் கால்கள் திரும்பின.

காதலன் வருவான் என்ற ஆசையில் தூக்கத்தை தூரம் வைத்து இரு விழிகள்
இணையாமல் காத்து கொண்டு இருந்தாள் மூமல். அவளின் வருத்ததை அறிந்த அவளின் சகோதரி காதலன் போல் ஆண்வேடம் தரித்து அவளை
மகிழ்விக்க நினைத்தாள். ஆனால் மூமல் சிறிதும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை. காதலனை காணாத ஏக்கமும், வருத்ததுமே நிறைத்திருந்தது அவளை. அப்படியே படுக்கைக்கு சென்றாள். அவள் சகோதரியும் அந்த ஆண் வேடத்தை கலைக்காமல் அவள் அருகில் படுத்தாள்.

பின் இரவில் காதலியை காண வந்து சேர்ந்த மகேந்திரா அதிர்ச்சியடைந்தார்.
தன் காதலியுடன் படுக்கையில் இன்னொரு ஆண் இருப்பதை கண்டு மனம் நொந்து அரண்மனை திரும்பினார்.

தன் காதலன் இரவு முழுதும் வராததால் கலக்கம் அடைந்த மூமல் அவர்
தன்னை மறந்துவிட்டதாக நினைத்து வருந்தினாள். விறகுகளால் சிதை மூட்டி அதில் பாய்ந்து தன் உயிரை எரித்தாள் அந்த இன்னொரு காதல் கண்ணகி.

காதலும் கடந்து போகும். அழியா தடமாக!                        

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...